சிறுவர் உரிமைகள்
இச்சமவாயத்தில் 54 உறுப்புரைகள் காணப்படுகின்றன. இலங்கை 1991ம் ஆண்டு இதில் கையெழுத்திட்டது. சிறுவர் உரிமை சமவாயம் உலகின் அனைத்து சிறுவர்களுக்கும் பொருத்தமானது. அச்சமவாயத்தில் கையெழுத்து வைத்துள்ள அனைத்து நாடுகளும் அதன் உறுப்புரைகளை மதித்து நட்பதே அவர்களது கடமையாகும்.
குழந்தை பிறக்கும் போதே உயிர்வாழும் உரிமையுடனேயே பிறக்கிறது. குழந்தை பிறந்தவுடன் பதிவு செய்யப்படவும், பெயரைப் பெறவும், தேசிய இனத்தைச் சார்ந்து வாழவும், குழந்தை பெற்றோரை அறியவும் அவர்களிடமிருந்து பராமரிப்பைப் பெறவும் உரிமை கொண்டுள்ளது.
சிறுவர் உரிமைகளின் மிகவும் பிரதான பகுதிகள் நான்காக அமையும். உயிர் வாழ்தல், அபிவிருத்தி, பாதுகாப்பு, பங்குபற்றல் என்பவைகளாகும்
உயிர்வாழ்வதற்கான உரிமை
* ஒவ்வொரு பிள்ளையும் இயற்கையாகவே கிடைத்துள்ள உயிர்வாழும் உரிமையைக் கொண்டுள்ளதுடன் யுத்தம், இயற்கை அனர்த்தம், எச்.ஐ.வி.(எயிட்ஸ்), மந்தபோசனை, அபாயகரமான தொழிலில் அமர்த்தல் மற்றும் சித்திரவதை போன்ற எல்லா வகையான ஆபத்துக்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாத்தல்;
* அவனின் அல்லது அவளின் அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சிறுவர் உரிமைக்கு மதிப்பளிக்கப்படுவதனை அரசுத் தரப்பினர் பொறுப்பேற்றுக் கொள்கின்றனர்.
அபிவிருத்திக்கான உரிமை
* சிறுவர்களை வளர்ப்பதிலும் அபிவிருத்தியடையச் செய்வதற்குமான ஆரம்பப் பொறுப்பு பெற்றோரிடம் அல்லது சட்டமுறையான பாதுகாவலரிடம் உள்ளது. சுகாதாரக் கவனிப்பு வசதிகளை அடைந்து கொள்வதற்கான அவனின் அல்லது அவளின் உரிமை சமூகக் காப்புறுதி அடங்களான சமூகப் பதுகாப்பின் நலனைப் பெறும் உரிமை உண்டு.
* உடல், உள, ஆன்மீக, ஒழுக்க, சமூக மேம்பாட்டுக்கு ஏற்றவாறான வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கும் உரிமையும் உண்டு.
பங்குபற்றுவதற்கான உரிமை
* பொருத்தமான வழிமுறை மற்றும் வழிகாட்டல் வழங்குவதற்குள்ள பெற்றோரின் அல்லது அல்லது சட்ட பாதுகாவலர்களின் பொறுப்புக்கள், உரிமைகள் மற்றும் கடமைகள் என்பவற்றினைக் குறிக்கும.;
* தானாகவே கருத்துக்களை எண்ணித்துணியும் ஆற்றலுடைய பிள்ளைக்கு, அதனைப் பாதிக்கும் எல்லா விடயங்களிலும் அவனின் அல்லது அவளின் சொந்தக் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையுண்டு.
பாதுகாப்பிற்கான உரிமை
* பாதுகாப்பதற்கு பொருத்தமான சட்டவாக்க, நிருவாக, சமூக மற்றும் கல்வி நடவடிக்கைகள் கிடைக்கப்பெற வேண்டும். அத்துடன் உள்ளத்தைப் பாதிக்கக்கூடிய பொருட்களைச் சட்டவிரோதமாக பிள்ளைகள் பாவிப்பதனைவிட்டும் பாதுகாப்பு பெறும் உரிமையுண்டு.
* எல்லா வகையான பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பு பெற சிறுவர்களுக்கு உரிமையுண்டு. அத்துடன் சிறுவர் கடத்தப்படுதல், விற்றல் மற்றும் பலாத்காரமாகக் கொண்டு செல்லப்படுதலை தடுத்தல் என்பவற்றிற்கான பாதுகாப்பு சிறுவர்களுக்குண்டு.
சிறுவர்களானவர்கள்; 18 வயதுக்குக் குறைந்த மனிதப் பிறவியினர் அனைவரும் சிறுவர்களென ஜக்கிய நாடுகள் சிறுவர் சமவாயத்தின் குறிப்பிடப்படுகின்றது. சிறுவர்கள் பாதுகாப்பிற்கும், அன்பிற்கும், கௌரவத்திற்கும் உரித்தானவர்கள்.
சிறுவர்கள் உரிமைகள் சம்பந்தமாக சட்டங்களும், கொள்கைகளும் பாதுகாப்பு பொறிமுறைகள் என்பன இருக்கின்ற போதும். சிறுவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றமையும் தொழில்களிற்கு அமர்த்தியிருப்பதைம் காணக்கூடியதாகவுள்ளது. அண்மைக்காலமாக எமது நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் பாலியல் துன்புறுத்தல்களும், படுகொலைகளும் அனைவரையும் கவலைக்குள்ளளாகியுள்ளது.
சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் அரசும், பொதுமக்களும் சட்டரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் கடமைப்பட்டுள்ளனர்.
இலங்கையில் சர்வதேச சட்ட ஏற்பாடுகளை நேரடியாக உள்நாட்டு சட்டமாக அமுல்படுத்தவோ சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்புக்கள் வழங்கவோ முடியாது. அதாவது ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமை சமவாயத்தில் உள்ள விடயங்களை இலங்கை நீதிமன்றங்கள் நேரடியாக சட்டமாக அமுல்படுத்த முடியாது. இச்சர்வதேச சட்டங்கள் முதலில் உள்நாட்டு சட்டமாக கொண்டு வரப்பட்டால் மாத்திரமே எமது நாட்டு நீதிமன்றம் மூலம் பரிகாரம் பெற முடியும். மனித உரிமைகளே சிறுவர் உரிமைகளின் அடிப்படை என்பதால் அனைத்து சிறுவர்களும் சமத்துவமானவர்கள் என்பதை மனதிற் கொள்வோமாக.




Comments
Post a Comment